Saturday, January 2, 2010

வாங்க சட்னி வைக்கக் கத்துக்கலாம்


தோசை வார்க்கிறது எப்படின்னு சொன்னியே தொட்டுக்கச் சட்னி எப்படி வைக்கிறதுன்னு சொன்னியாடான்னு நம்ம சாப்பாட்டுல மயங்கின ரசிகர் பட்டாளம் மின்னஞ்சல், அலைபேசி அழைப்புகள்ல திட்டுனதுனால இப்போ சட்னி வைக்கிறது எப்படின்னு பார்க்கலாம். :)


தேவையானவை :

தேங்காய் - அரை மூடி
பொரிகடலை - 25 கிராம்
பச்சை மிளகாய் - 3/4
கடுகு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
சீரகம் - கொஞ்சம்
உப்பு - கொஞ்சம்

செய்முறை :

1. தேங்காயை பத்தை பத்தையாக வெட்டி மிளகாய், பொரிகடலையுடன் மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.

2. பின்னர் வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு தாளிக்கவும்

3. தாளித்ததை தேங்காய கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.

4. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

5. கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொண்டால் சுவையான சட்னி தயார்.

தோசை வார்ப்பது எப்படி ?


அடடா நம்ம வலைப்பக்கம் வந்தே பல மாதங்கள் ஆகிப் போச்சே?? சரி கவலைப்படாமல் இன்னிக்கு தோசை வார்ப்பது எப்படின்னு பார்க்கலாம்.

1. முதல்ல நம்ம பதிவே பேச்சலர்களுக்கானது தான் எனவே தோசைமாவெல்லாம் நீங்களே ஆட்டுக்கல்லிலோ, கிரைண்டரிலோ அரைத்துக் கொள்ளுமாறு சொல்லமாட்டேன் :). ஒழுங்கா போய் கடையிலே 10 ரூபாய்க்கு மாவு வாங்கிக்கோங்க.

2. தோசைக்கல்லை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.

3. ஒரு பெரிய வெங்காயத்தை நடுவாக்கில் இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இது எதுக்குன்னு கேட்கிறீங்களா? அவசரப்படாதீங்க.

4. தோசைக்கல் சூடானவுடன் அரைஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தால் தோசைக்கல் முழுவதும் பரவுமாறு தடவுங்கள். இப்போ புரிஞ்சதா வெங்காயம் எதுக்குன்னு?

5. குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லின் நடுவில் மாவை ஊற்றி மெதுவாக கரண்டியின் அடிப்பாகத்தால் மாவால் வட்டம் போடவும்.

6. பின்னர் தோசையின் மேலும் எண்ணெய் விடவும். வெந்தவுடன் தீயைக் குறைத்து தோசைக்கரண்டியால் திருப்பிப் போடவும். பின்னர் சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் ஐயோ!!! ச்சே!! ஆஹா ... அமுதம். :)

தோசையின் மேல் வெங்காயம், இட்லிப்பொடி இப்படி என்னவேணாலும் தூவி வெங்காயதோசை, பொடிதோசை என சாப்பிட்டு ஜமாய்ங்க ..